Monday, 12 February 2018

அவளுக்கான வரிகள் ( soup boy - words )


             ** Soup boy - words **

அவள் ..
வருகைக்கு முன் !!
கனவு கண்டுக் கொண்டிருந்தேன் ...
.
.
அவள் ..
வருகைக்குப் பின் !!
கண்ட கனவுகளில் வாழ்ந்துக் கொண்டிருந்தேன் ..
.
.
அவள் ..
போன பிறகு தான் !!
என் வாழ்க்கையே வாழப்போகிறேன் ..

**

அவள் மீது ..
அன்பை செலுத்துங்கள் !!
கொட்டி விடாதீர்கள் ..

திரும்ப அள்ள எல்லாம் முடியாது ..
நீங்கள் கொட்டிய அன்பை
காற்றடிக்கும் திசையில் !
பறக்கச் செய்திருப்பாள் ..
அவள் !!

**

மை லார்ட் ..
சிற்றின்ப பட்டியலில் ..
அவள் காதலையும் சேர்த்து விடுங்கள் !!

**

நீங்கள் அப்ப அப்ப
தருவதை / தந்ததை எல்லாம் ..
அவளும் தர வேண்டும் ..என
எதிர்ப்பார்க்காதீர்கள் !!

கடைசியில் மொத்தமாக ஒன்று தருவாள் ..
வாங்கிக் கொள்ள .. Sorry ..
தாங்கிக் கொள்ள தயாராகுங்கள் ..

**

நான் எப்பவும் ராவா ... தான் ?
ஏனா ?
என் மனசு பூரா.... அவளே தான் !!

**

அவள் பிரிவினால் தான் ..
முதன் முறையாக
விரல்களுக்கு இடையே சிகரெட்டை பற்றவைத்தேன் !!
காரணமிருக்கிறது ...
நான் ஊதித் தள்ளும் புகை காற்றில் மறைவது போல ..
அவள் நினைவுகளும் மறையட்டும் என்றுதான் !!

**

அப்போது ...
எங்கே பார்த்தாலும் அவள் முகம் !!
இப்போது..
எங்கே தேடியும் அவளே காணும் !!

ஒளிந்திருந்து விளையாடுகிறாளோ ?

காதல் விளையாட்டாக இருந்தால் சரி..
என் வாழ்வில் விளையாடுவதாக இருந்தால் ??

**

கொள்ளையடிக்க வந்தவளே ..
கொள்ளை அடித்து விட்டு போயிருக்கலாமே ??
ஏனடி ?
கொன்று விட்டு போகிறாய் ..

**

அவள் ...
மாடு ! மாடு ! என்றழைக்கும் போது ..
செல்லமாக அழைக்கிறாள் என்றிருந்தேன் !
இப்போது தான் காரணம் தெரிகிறது ..
அவளின் நினைவுகளை
முழுங்கவும் முடியாமல் ..
துப்பவும் முடியாமல் ...
அசைப் போட்டுக் கொண்டிருக்கிறேன் ..
நல்ல எருமை மாடாக !!

**

தூங்கும் போது கூட
அலைபேசியை காதருகே தான் வைத்துள்ளேன் !!

அவளின் மறதினால் ..
தெரியாதனமாக கூட அவளிடமிருந்து ..
அழைப்பு வந்துவிடுமோ ? என

காத்திருக்கிறோம்... நானும் !
என் அலைபேசியும் ..

**

என் காதல் பொல்லாதது ...
எப்படியும் ஒருநாள் என்னை எண்ணுவாய் !!
உன் விழியோரம் நீர் ததும்பும் ..
சிந்தினாலும் பரவாயில்லை ..
கவலை கொள்ளாதே .. கண்மணியே !!

அப்போதும்
அதை துடைக்க ...
உன் கழுத்தை தவழும் துப்பட்டாவாகவோ !
உன் மேனி சூழ்ந்த புடவையாகவோ !
எப்போதும் போல் உன் கைக்குள் அகப்பட்ட ..
கைக்குட்டையாகவோ !!
நானே இருப்பேன் ..

**

மறவாதே கண்மணியே .. என்னை அல்ல ..என் காதலே !! என்னை விட எந்த கொம்பனும் உன்னை இவ்வளவு நேசித்திருக்க மாட்டான் என ..

        ** மங்களம் _உண்டாக்கடும் **

Sunday, 11 February 2018

சவரக்கத்தி - பிசாசு கையில் தங்கமீன்

                        **சவரக்கத்தி**

இந்த கத்தி பார்ப்பவர்களை குத்துமா என்று தெரியவில்லை .. ஆனா , கண்டிப்பா  ஏதோ ஒரு வகையில் உரசி பார்க்கும் ..

பிசாசு  (மிஷ்கின் ) (மங்கா)
தங்கமீன்கள் (ராம் ) (பிச்சை)
தூண்டில் (பூர்ணா) (சுபத்ரா)

இந்த பிசாசுக்கு தங்கமீன் வேணும் .. அதை எப்படியாவது அடையனும்னு போராடுது..  தங்கமீனை பிடிக்கிறதுக்கு ஒரே வழி.. தூண்டில் இந்த பிசாசு கையில் இருந்தால் மட்டுமே சாத்தியம் ..அதே தான் அதுவும் பண்ணுகிறது ..

தங்கமீன் ரொம்பவே சுவாரஸ்யமானது .. தன் குழந்தைகளுக்கு முன்னால் ஹீரோவாகவும் , பேரம் பேசும் மனிதனாகவும் , உண்மையிலேயே தூண்டிலில் அகப்பட்ட மீன் போலத் தான் ,அவன் காது கேளாத மனைவியிடம் சிக்கித் தவிக்கிறான் .. காட்சிக்கு காட்சி சிரிப்பு , கோபம் ,அழுகை ,தன் இருப்பை காட்டுதல் என பல்வேறு பரிமாணங்களில் தோன்றுகிறான் ..

பிசாசு .. ஒரு ஜிப்பா , மிலிட்டரி கட்டிங்  ,கழுத்துல ஜெயின் ,கூர்மையான பார்வை ... அந்த பிசாசின் குணம் எப்ப  பார்த்தாலும் கோப படும் .. கோபம் மட்டுமே படும் ...நல்லா தொண்டை தண்ணீர் வற்ற கத்த தெரியும் ...

தூண்டிலுக்கு இதை விட நல்ல கதாபாத்திரம் அமையுமா  ? என்பது கேள்விக்குறியே ..
புருஷனுக்கு ஏற்ற மனைவி போல் தான் அவளின் பகுமானமும் ,வாயும் ..

கவனிக்கத் தோன்றிய இடங்கள் ::

** குப்பைத் தொட்டியில் தங்கமீன் ஒளிந்திருக்கும் போது .. குப்பை அள்ளுபவனின் செயல் .. அவனுக்கு தேவை குப்பை மட்டும் தானே .. அவனது செயலை பார்த்தால் எவனுக்கோ அது தங்கும் வீடு போல

** நீங்க எங்க இருக்கீங்கனு சொல்லுங்க நானே வருகிறேன் என தங்கமீன் சொல்லும் போது ..
"இல்ல ..நீ ஓடு ..நான் உன்ன துரத்தி பிடிக்கிறேன் " என பிசாசு தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ..சொல்லுவது எல்லாம் தன் இருப்பை நிலை நாட்டவும் !!
தோல்வியை ஒப்புக் கொள்ளமுடியாமல் தவிப்பதும் தான்

** என்னத்த ராக்கெட் செஞ்சு மேல பறக்க விட்டாலும் ... கையால தான் கழுவனும் .. என கவனிக்க வைக்கிறார் டீ கடையில் வேலை செய்பவர்

** இப்படியொரு காதலை காட்டியதற்கே ஆயிரம் முத்தங்கள் தரலாம் அந்த பிசாசுக்கு (கதை ,திரைக்கதை ) !! தனக்கான மாப்பிள்ளை ஒரு ஊனம் என்று தெரிய வரும்போது .. அவளிடம் நீடிக்கும் அந்த மவுனங்களே உடைத்தெறிந்தது ..அவள் சாதிகளின் ஆணவத் தன்மையே .. ஊனமற்றவனின் கால்களை தாங்குவது எல்லாம் ... அவளின் பாவங்களை கழுவும் செயல்

** எல்லாம் இழந்து போய் இருப்பவனுக்கு உத்வேகம் தரும் ஊனமுற்ற டீ கடைக்காரரின் சைகை மொழிகள்

** கரும்பு ஜூஸ் அக்கா , சைக்கிள் கடை ஓனர்

** பிசாசின் நிலை கண்டு துடிக்கும் அவனின் அப்பா

** தத்துவம் பேசும் பைத்தியம் .. ஆங்கிலத்தில் பேசினால் அவன் மகான் ..

இதை விட முக்கியமாய் கவனிக்க வைத்த இடங்கள் ..

** நிறைவு பகுதியில் ... நம்ம அப்பா / நமக்கு ஹீரோ தானா !!

தங்கமீன் அடி வாங்கும் காட்சி .. யப்பா .. சண்டை போடுப்பா !! என கண்ணீர் மல்க கெஞ்சும் பெண் பிள்ளையிடம் ..
"அப்பாக்கு ..சண்டை தெரியாதுமா " என கண்ணீர் சிந்தும் அதே தங்கமீன் தான் !!

ஆண் பிள்ளை ஓடி வந்து பார்க்கிறது .. தன் தந்தை அடி வாங்குவதை .. அவனிடம் வார்த்தைகள் கூட இல்லை ... ஒரு பார்வை தான் .. இதை கவனித்த தங்கமீன் வீரம் கொண்டு எழுவது எல்லாம் ?

பெண் பிள்ளை சொல்லும் போது .. எங்கே போனது அந்த வீரம் ..

** கட்டி உருளும் பிசாசும்  , தங்கமீனும் .. தண்ணீர் டப்பாவில் இவர்கள் மோதும் போது ..அங்கு அவளின் தண்ணீர் குடத்திலிருந்து வெளிவருகிறது சிசு .. கணத்த மெளணங்கள் ஆக்கிரமிக்கிறது சில நொடிகள்..

#கத்தி எதுக்கு தான் .. தொப்புள் கொடி வெட்டத்தான் ...

** அந்த கத்தியை கழுவ திறந்த தண்ணீர் குழாயை ஏன் அவள் அடைக்காமல் சென்றால் ?? அந்த பிசாசுக்கு தண்ணீர் தெளித்து உயிர் கொடுக்கவா ..

வந்து விட்டதே .. பிசாசுக்கும் உயிர் , மனிதாபிமானம் எல்லாம் ..

https://youtu.be/JVFm1gYgXkI

Tuesday, 6 February 2018

உரையாடல் with அவனும் ..அவளும் ..நடுவுல ஒரு பூ வும் !!

யம்மா !! யம்மா !! டைம் ஆயிடுச்சு ...

நான் கிளம்புறேன்...

எப்போதும் போல் பரபரப்பாக கிளம்புகிறான் "ஷ்" ..

இவனின் வருகைக்காக ...எப்பவும் போல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் ,அவனது கல்லூரி தோழிகளான ..
"னி" &  "னோ" & "மா" ..

( என்ன பிடிபடலையா ?  "_" இந்த குறிக்குள் இருப்பது அவர்கள் பெயரின் இறுதி எழுத்து .. இத்தொடர் முடியும் தருவாயில் சொல்கிறேன் ..அவர்களது பெயரை !! இல்லை ... நீங்களே உத்தேசித்து கொள்ளுங்கள் )

சிறு வயதில் இருந்தே ஒன்றாக தான் படிக்கிறார்கள் ,இந்த 4 பேரும். "ஷ்" வீட்டு வழியாக தான் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் .அது மட்டுமில்லாமல் , "ஷ்" வீட்டை சுற்றி பூக்கள் வித விதமாக பூத்து இருக்கும் ..அவனது தந்தை ஒரு தோட்டக் கலை தொழிலாளி ,கூடவே பூச்செடிகள் விற்பதும் ..

இதற்காகவே அந்த "னி" & "னோ" & "மா "
மூன்று பேரும் வருகை தருவது ஒரு காரணம் . இவர்கள் தலையில் பூ சூடிக் கொள்ளும் செலவு மிச்சம் பாருங்க ..

***

என்னம்மா  ! "னோ" உன் அக்காக்கு குழந்தை பிறந்திருக்காமே ? என்று வினாவிக் கொண்டே அவள் தலையில் தான் கோர்த்த மல்லிகை பூவை வைக்கிறாள் "ஷ்" வின்  அம்மா ..

ஆமா ! ஆண்ட்டி ... நாளைக்கு தான் நான் போய் பார்க்கனும் ..இன்னிக்கு கடைசி நாள் காலேஜ் ... அதான்..

சரிமா !! பார்த்து போய்ட்டு வாங்க ....

*****

உங்களுக்கு ஒன்று தெரியுமா ?

இந்த "ஷ்" க்கு "னோ" மீது ஒரு தலைக்காதல் .... இன்றாவது , எப்படியாவது சொல்லிட வேண்டும் என மனதை தயார் செய்து கொண்டு உள்ளான் ...

மதிய உணவுக்காக ... வகுப்பறையில் இருந்து எல்லோரும் வெளியே கிளம்புகிறார்கள் .."ஷ்" அவனது இடத்தில் அமர்ந்து எதையோ ,யோசித்துக் கொண்டே இருக்கான் ...

என்னடா ? சாப்பிட வரலையா .. என்னாச்சு இப்படி உட்கார்ந்து இருக்க .. வா..போகலாம் :   "னோ" அவனது கையை பிடித்து கூப்பிடுகிறாள் ...

உன்ட .. கொஞ்சம் பேசணும் .. உட்காரு !!
அவளை அருகில் அமர வைக்கிறான் .. "ஷ்"

ஏய் ? நீங்க வேணும்ன போங்க ..நாங்க பின்னாடி வாறோம் என "னோ" சொல்வதற்கு முன்னாடியே "னி" யும் "மா" வும் நடையே கட்ட ஆரம்பித்து விட்டார்கள் !!

உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா ? இந்த "னி" க்கும் , "மா" க்கும் இவன் காதல் விஷயம் தெரியும் .. உனக்கு சொல்ல தயக்கமா இருந்தா சொல்லு !! நாங்களே அவளிடம் சொல்லிடுறோம் .. என சொல்லியும் பார்த்தாச்சு எப்பவோ ..

நம்ம துரை "ஷ்"  தான் இல்லை , நானே சொல்லிக்கிறேன் . நீங்க எதுவும் பண்ண வேண்டாம் ,என அன்பு கட்டளையிட்டு உள்ளான் ..

ஏண்டி ?? "மா " இன்னிக்காச்சும் ... சொல்லிடுவானா ? இந்த பக்கி என சிரித்துக் கொண்டே போகிறாள் "னி"..

****

சரி... சொல்லுங்க ஷார் !! என்னாச்சு உங்களுக்கு ...

பையில்  இருந்து ஒரு பேப்பரை எடுத்து அவள் முன் நீட்டுகிறான்..

எட்டாய் மடித்து வைத்திருந்த பேப்பரை விரித்து பார்க்கிறாள் ... கோபம் !! உச்சிக்கு ஏறி என்னடா இது ? ஒன்றுமே இல்ல .. வெறும் பேப்பரா இருக்கு ..

அவன் குடுத்தான் ! அதுல  அவனால எழுத முடியலனு ... ஏன்ட  சொல்லி அனுப்பிருக்கான் !! " ஷ்" மெளனத்தை உடைத்து பேச முயல்கிறான் ..

யாரு அவன் ? என்ன சொன்னான் ??

அவனா ??? அவன் ...அவன் ...

அடேய் !! சீக்கிரம் சொல்லு !! பசிக்குது எனக்கு ...

அவன் வேற யாரும் இல்ல .. எங்க வீட்டு மெயின்  கதவை ஒட்டுன மாதிரி ஒரு ரோஜா செடி இருக்கும் ல .... அதுல பூக்குற ரோஜா பூ ( மஞ்சள் நிறம் ) ...

பூ வா ?? அதுக்கு என்ன ...

அது உன்ன ரொம்ப காதலிக்குதாம் .. அது சொல்லுது , அந்த பகுதியிலேயே அதுதான் மஞ்சள் நிறமா ? மற்றதைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்குமா. அதனாலே , எல்லோருக்கும் என் மேல ஒரு கண்ணு !! நான் ? நீ ? னு போட்டி போடுவாங்க ..என்ன பறிக்க ..

ஆனா.. நீ தான் அத கண்டுக்கொள்ளவே மாட்டேன்குறனு ரொம்ப பீல் பண்ணுது .. அதுக்கு உன் கூட சேர்ந்து இருக்கணும்னு ரொம்ப ஆசையாம் ..ஏன் ? உனக்கு அது பிடிக்கலையா ..

யாரு சொன்னா ?? அந்த மஞ்ச ரோஜா தான .. அது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் .. நான் தினமும் வருவதே அத பார்க்கத் தான் ..என்ன ? எனக்கு பிடிச்சது இங்க எல்லோருக்கும் பிடிக்குது ..அதான், அது மேல கொஞ்சம் பொறாமை ..கண்டுக்கொள்ள மாட்டேன் .ஆனா,அத ஒரக் கண்ணால பார்ப்பேன் ..ரொம்ப அழகா இருக்கும் !!
அதுட போய் சொல்லு அவளுக்கு உன்ன ரொம்ப பிடிக்குமாம்னு..

நெஜமாத் தான் சொல்றீயா .."னோ" ..அப்புறம்,
அதோட காதல்வலியை வெளிபடுத்துகிற மாதிரி ஒரு விஷயம் சொன்னது !! சொல்லவா ??

சொல்லுடா !!

அந்த பூ சொல்லுது ..

அவளால் ..
பறிக்கப்பட்டு ..
அவளின் கூந்தலில் ஒய்யாரமாய் அமர்ந்த
பூவல்ல நான் !!

அவளால் ...
மறுக்கப்பட்டு ..
தற்கொலை என்கிற பெயரில் தானாக உதிர்ந்த
பூ நான் !!

அவளின் கூந்தலில் அமர்ந்த பூ வின் மணம் வாடியதை உணர்ந்த அவளுக்கு !!

தானாக உதிர்ந்து அவள் காலடிக்கு மெத்தையாகிய
எனது மனம் ஊசலாடுவது அவளுக்கு தெரியாமல் போனது ஏனோ ??

டேய் ...."ஷ்" ..என்ன அவ்வளவு லவ் பண்ணுதா ? அந்த பூ ..சரி..நாளைக்கு அத எங்க வீட்டுக்கு கொண்டு போய்டுறேன் .. இனிமே எப்பவும் அது என் கூட இருக்கும் ..கவலைப்பட வேண்டாம்னு , அதுட சொல்லு !!

சரி.."னோ" ..ஆனா,???

என்னடா ...திரும்ப...

இல்ல..அது இன்னொரு விஷயம் கடைசியா சொல்லுச்சு ..அதான்,எப்படி சொல்லனு தெரியாம.?

சொல்லுடா ...எதுனாலும்...இப்ப நீ சொல்றீயா ?? இல்ல நானே , அதுட கேட்கிறேன் ..விடு..

இரு ..நானே சொல்றேன்..அது சொல்லுது! உன்கூட அது சேர்ந்து வாழனுமா ? தினமும் காலையில உன் கூந்தலில் குடி புகுந்து ..மாலையில் குப்பைத் தொட்டிக்கு போகிற வாழ்க்கை அதுக்கு வேண்டாமா ? அதுவும் இல்லாமல் சில காலங்களில் அது பூக்கவே பூக்கதாம்..

உன் கூட எப்பவும் சேர்ந்து வாழனும்னா ?? அது மனிதனாக பிறவி எடுக்க வேண்டும் .இல்லையேல், நீ அதே செடியில் ஒரு பூ வாக உருவாக வேண்டும் .. இதுல ஏதாவது நடக்க எத்தனை ஜென்மம் வேண்டும் என தெரியவில்லை ..அதனாலே , எனக்கு பதிலா நீ ("ஷ்") கல்யாணம் பண்ணிக்கோ ..என்ன மாதிரி, அவள  நீ சந்தோஷமா பார்த்துக் கொள்வாய் ..அதாவது , நான்...உன்ன கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என சொல்லுது ..என்ன பண்ண ???

( அருகில் அமர்ந்தவள் ..எழுந்து நிற்கிறாள் )

கையை இறுகப் பிடித்துக் கொண்ட "ஷ்" ..எங்கப் போற..அந்த பூ வுக்கு ஒரு பதில் சொல்லிட்டு போ ..

அவள் முகம் இப்போது இவனை திரும்பி பார்க்கிறது .. கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிகள் .அந்த பூ க்கு இப்ப தான் அப்படி சொல்லத் தோணுச்சா ??

இல்ல !! இப்ப தான் அதுக்கு தைரியம் வந்துச்சு !! சொல்லிடுச்சு ..ஆமா ? அழுகுறீயா ??

நானா ? நான், ஏன் அழப்போறேன் நீ இருக்கும் போது .. அவனது இறுகிய கைப்பிடியை கண்ணருகே வைத்துக் கொண்டு , பெரு மூச்சு விடுகிறாள் ..

ஏய் ! லூசு..என்னாச்சு ..சரி திரும்பு ..தான் மறைத்து வைத்திருந்த அந்த மஞ்சள் நிற பூவை அவள் தலையில் வைத்து அதை அவள் சூடிய அழகை பார்த்து விட்டு .. தோல்கள் உரச  ,கைப்பிடி இன்னும் இறுக அணைத்துக் கொண்டு முன்னே செல்கிறார்கள் ..

ஒரு பூ வின் காதல் ஜெயித்தது ...அட !! ஒரு நிமிஷம் ...சொல்ல மறந்துட்டேன் .. "ஷ்" அம்மா இன்னிக்கு காலையில "னோ" தலையில மல்லி பூ வச்சதுல ...அப்ப அது ..??

ஸாரி மல்லி ...


என் மனதில் "ஷ்" - பிரகாஷ்

"னோ" - வினோ "மா"-ஹேமா " னி"- ரஞ்சினி

Sunday, 4 February 2018

நினைவலைகள்

இது கதை அல்ல !
கவிதை அல்ல !!
கற்பனைகள் அல்ல !!!

என் #மெய்யான_மெய்யே

தாயின் மடியில் தவம் கிடந்த நாட்கள் துளியும் ஞாபகமில்லை ..
தகப்பன் தன்னை தோளில் சுமந்த காலங்கள் இன்னும் வியப்பின் ஆச்சரிய கேள்விக்குறி தான் ..

அந்த மனுசனுக்கும் நம்ம மேல பாசம் இருக்குது ..அதை காட்டுகிற நிலைமையில் தான் இல்லை போல் ..

ஆனால் !!

இந்த நட்புகளுடன் இருந்த மணித் துளிகள் மட்டும் ...
நினைவலைகளாக ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கு ...
நீச்சல் தெரியாத காரணமோ ? என்னமோ ?
அதில் இருந்து வெளிவர முடியாமல்
தத்தளித்துக் கொண்டே இருக்கிறேன் ..

எத்தனை எத்தனை நினைவுகள் !!
அதில்,ஒன்றாவது இனி நடக்காதா ?
என தவிக்கின்ற என் இதயங்கள் !!

****

என் எச்சியை ...
தாயை தவிர எவரும் ...
இவ்வளவு ரசித்திருக்க முடியாது !!
என்றிருந்தவனுக்கு செருப்படி கொடுத்தது
அந்த நட்புகளின் எச்சிகள் ...

அப்பன் வைத்த பெயரை மாற்றி ..
பட்டப் பெயர் வைத்தோம் !!
நமக்கு நாமே
கூப்பிட்டு பார்த்தால் கூட ...
அந்த பெயர் தான் நம்மை வசீகரிக்கிறது ..

பெரும்பாலும் ..
அந்தரங்க வார்த்தைகள் தான் எங்களை சூழ்ந்திருக்கும் !!
அது ஆகாயத்தையே சீண்டுமளவிற்கு
அனல் பறக்கும் ..

*****

இடையில் எப்போதாவது ..
முட்டிக் கொள்வோம் ..
மோதிக் கொள்வோம் ..
சட்டையே பிடித்துக் கொள்வோம் ..

ஆனால், கொஞ்ச நாளிலேயே !!
சின்னம்மா பாணியில் ..

ஒருவரையொருவர் ;
பார்த்துக் கொண்டும் ..
பேசிக் கொண்டும் ..
பல்லை இளித்துக் கொண்டும் ..
கை கோர்ப்போம் !!

என் உடன்பிறப்புக்கே ..
அனுமதியில்லை நான் பயன்படுத்துவதை
அவன் உபயோகிக்க !!

இவனுக்கு மட்டும் எப்படி கொடுத்தேன்
இவ்வளவு சுதந்திரத்தை ..
#சர்வமும்_தாராளமயம்
ஆனால், நட்புகளுக்குள் சொல்லப்படாமல்
ஒர் உடன்படிக்கை இருந்தது ..
வேறு என்னவாக இருக்கப் போகிறது ..
அந்த உள்ளாடையின் பயன்பாட்டை தவிர

****

நட்புகளின் அழுகையை வேடிக்கை பார்த்தது எல்லாம் ..
தந்தைகளின் மரணத்தில் தான் ...
அந்த வலிகளிலிருந்து
முதலில் நான் மீள வேண்டுமே ..
அப்புறம் தானே நண்பனை அழாதே என ஆறுதல் கூற முடியும் ..

வகுப்பறையில் அவர் !! (ஆசான் )
(எல்லாரையும் குறிப்பிடவில்லை )

பாடம் நடத்துவது போல் படம் காட்டுவார் ..
இங்கே கடைசி பலகையிலும்
படம் காட்டப்படும் .. இலவசம் தான் !!
ஆங்கில நாயகியின் ஆடையில்லா ஆட்டங்கள் ...
அவளின் முனகல் ஒலி கூட
Mute செய்யப்பட்டிருக்கும் ... என்பது வேற விஷயம் !!

நேரங்காலம் அறியாது
சாப்பிடுவோம் ....
கைவைக்காத டிபன் பாக்‌ஸ் இல்லை ..

வகுப்பு நேரத்தில் ..
கல்லமிட்டாயை கூட கடுகு போல தான் கடிப்போம் ..
சப்பாத்தியை கூட இட்லி போலத்தான் முழுங்குவோம் ..

(வெயிட் ..சிரிப்பு வருது ..அவனும் சிரித்திருப்பான் ..)

பசியில்லை என்றாலும் ..ருசிக்காகவே தின்ற நாட்கள் அது ...
இப்போது எல்லாம் !!
பசியும் இல்லை .. திங்கிற தீவணங்களில் ருசியும் இல்லை ..

******

தலையனை வேண்டாம் ..
தாய்மடி வேண்டாம் ...
அவன் உடல் மேனியும் ..
யானை வயிறு தொந்தியும் போதும் ..
துயில் கொள்ள ..

தினம் ஒரு நட்பு கிடைக்கத்தான் செய்கிறது ..
ஆனால், எதுவும் நான் தொலைத்த நட்புகளின் அருகில் கூட வராமல் தொலைவிலே நிற்கிறது ..

****

எனக்கு காதலி இல்லை ..
இப்படி எழுதிப் புலம்பிக் கொண்டே இருப்பதால் வரப்போகிற மனைவியும் நீடித்திருக்க வாய்ப்பில்லை ..
அந்த நட்பின் நினைவுகள் போதும் ..

எவ்வளவு சுகமான நினைவுகளாக இருப்பினும் ..
நினைத்துப் பார்த்தால் ..
மனதில் கனத்தையும் ..
விழி ஓரத்தில் கண்ணீரையும் தான் தருகிறது !!

எத்தனை எத்தனை நினைவுகள் !!
அதில்,ஒன்றாவது இனி நடக்காதா ?
என தவிக்கின்ற என் இதயங்கள் !!

தொடரும் என் நினைவலைகள் ..